அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

ரமழான் - 23

லைலத்துல் கத்ர் - 1

திருமறைக் குர்ஆன் அருளப்பட்டதன் மூலமும், மனிதனைப் பக்குவப் படுத்துவதற்காக நோன்புகடமையாக்கப் பட்டதன் மூலமும் மிகப் பெரும் சிறப்பை எல்லாம் வல்ல அல்லாஹ் ரமழான் மாதத்துக்கு வழங்கியுள்ளான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அதன் தனிச் சிறப்புகளைஅண்ணல் நபி (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளனர்.

இந்தச் சிறப்புகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக

அந்த மாதத்தில் மகத்தான ஒரு இரவையும் அல்லாஹ் அமைத்து, அந்த இரவை ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் தன் அருள் மறையில் தெளிவாக்குகின்றான். அதற்காக ஒரு சூராவைஅத்தியாயத்தையும் அருளியுள்ளான்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

ஆயிரம் மாதங்களைவிட ஒரு இரவுக்கு அல்லாஹ்விடம் மதிப்புஇருக்குமானால், அந்த இரவை வீணடிக்க எந்த முஸ்லிம் விரும்புவான்?

எப்பாடுபட்டாகிலும் அந்த ஒரு இரவில் இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அவனது திருப்தியைப் பெறுவதற்கு எவர்தான் ஆசைப்படாமல் இருக்கமுடியும்?

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா? என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும்.

இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.


அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.


நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.


நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா? துர்பாக்கியசாலிகளா? என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள், போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது.

அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.


இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.


ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


அல்லாஹ் தன் திருமறையில் மகத்தான இரவு என்று குறிப்பிடுகின்றான். ஆனால், “இந்த இரவுஎன்று குறிப்பிட்டுக் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எந்த ஒரு இரவையும் லைலதுல் கத்ரு என்று வரையறுத்துச்சொல்லவில்லை. ரமலான் மாதத்தில் இறுதி பத்து நாட்களில் உள்ள ஒற்றைநாட்களில் அதனைக் காணலாம் என்பதாக புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில்பல ஹதீஸ்கள் உள்ளன.

21,23,25,27,29 ஆகிய ஐந்து நாட்களில் ஏதேனும் ஒருநாள்என்பதற்கு திட்ட வட்டமான ஆதாரம் உண்டு. லைலதுல் கத்ரை அடைந்து நல்அமல்கள் செய்ய விரும்புவோர், இந்த ஐந்து நாட்களிலும் அதிக அளவில் அமல்செய்தே ஆக வேண்டும்.

எனக்குலைலதுல் கத்ர்காட்டப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதனை ரமழான் கடைசிப் பத்தின் ஒற்றைப் படையான இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நான் லைலதுல் கத்ரை அறிவிக்க வந்தேன். உங்களில் இருவர் சர்ச்சைப்பட்டுக் கொண்டிருந்தனர். அது எனக்கு மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அது உங்களுக்கு நல்லதாகவே இருக்கும்” (முஸ்லிம்)

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி
(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்)
அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக
!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.


இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றை
ப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!


லைலதுல் கத்ரில் செய்யவேண்டிய அமல்கள்

லைலதுல் கத்ரில்குறிப்பிட்ட இந்த அமல்தான் செய்யவேண்டும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரையறுத்துச் சொல்லவில்லை.

இஸ்லாம் எவற்றை நன்மையான காரியங்கள் என்று குறிப்பிடுகின்றதோ அவற்றில் எதை வேண்டுமானாலும் செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய பாடுபட வேண்டும்.
முடிந்த அளவு அவன் தொழலாம். குர்ஆன் ஓதலாம், அதன்கருத்துகளை சிந்திக்கலாம், அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆ செய்யலாம்.

இன்னும் என்னென்ன நன்மையான காரியங்கள் என்று குர்ஆனும், நபிமொழிகளும் நமக்கு கூறுகின்றனவோ அவற்றில் எதையும் செய்யலாம்.

உள்ளங்கள் தூய்மைப் படுத்தப் படுவதைத்தான் அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ் நம்மை லைலதுல் கத்ருடைய முழு பயனையும்பெறக் கூடிய நல்லடியார்களில் ஆக்கி அருள்வானாக.

இன்ஷா அல்லாஹ் நாளை "லைலத்துல் கத்ர்" பற்றி விரிவாகக் காண்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்